Breaking News

ரேசன் கார்டுதாரர்களிடம் மொபைல் எண் சேகரிக்க உத்தரவு



ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தில், கார்டுதாரர் மொபைல் எண் மற்றும் தற்போதைய வயது விவரங்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கமான ரேஷன் கார்டுக்கு மாற்றாக, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
உடற்கூறு பதிவுகளை உள்ளடக்கிய ஆதார் பதிவு பணி நிறைவு பெற்றதும், அதன் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, 'ஸ்மார்ட்' கார்டு தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஆதார் பணி நிறைவு பெறாததால், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு உள்தாள் இணைக்கப்பட்டுள்ளது.


தற்போது, வாக்காளர் பட்டியலில், ஆதார் எண், மொபைல் எண் மற்றும் இ-மெயில் முகவரி பதிவு செய்து வருகின்றனர். அடுத்தகட்டமாக, ரேஷன் கார்டுகளில் ஆதார் எண் விவரங்களை சேகரிக்க முடிவு செய்துள்ளனர். முன்னதாக, கார்டுதாரர் மொபைல் எண், வயது சேகரிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடை வாரியாக, குடும்ப தலைவரின் மொபைல் எண் பதிவு செய்ய வேண்டும். குடும்ப தலைவரிடம் மொபைல் போன் இல்லாத பட்சத்தில், உறுப்பினரின் மொபைல் எண்களை பதிவு செய்ய வேண்டும். கடந்த ஜன., 1 நிலவரப்படி, குடும்ப தலைவர் உட்பட அனைவரின் பெயரும், வயது விவரங்களை தெளிவாக பதிய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தைகளின் பெயரை சேர்க்க வேண்டியவர்கள், தகுந்த ஆதாரம் சமர்ப்பித்து, விரைந்து சேர்க்க வேண்டும். கார்டில் பெயர் இடம்பெற்றுள்ள அனைவரும், ஆதார் எண் பதிவு செய்ய வேண்டியுள்ளது. அதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகும். முதற்கட்டமாக, மொபைல் எண் பதிவு மற்றும் வயது சரிபார்ப்பு பணி நடக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.