Breaking News

சிறந்த கல்வியாளராக தேர்வாகி அரசு பள்ளி ஆசிரியர் சாதனை



அமெரிக்காவில் நடந்த ஆசிரியர்களுக்கான கருத்தரங்கில், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், பிரபல'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்வியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில், புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகள், இணையதளம் மூலம் கற்பிப்பதில் புதுமை புகுத்திய ஆசிரியர்களின் படைப்புகளை அமெரிக்காவை சேர்ந்த பிரபல மென்பொருள் நிறுவனம் 'மைக்ரோசாப்ட்' ஆய்வு செய்தது.

இதில் தேர்வான ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு, டில்லியில் நடந்தது. இந்த கருத்தரங்கில் பங்கேற்ற, செஞ்சி தாலுகா சத்தியமங்கலத்தை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர், திலிப், அமெரிக்காவில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்றக தேர்வு செய்யப்பட்டார்.அதன்படி, திலிப்குமார் உள்ளிட்ட 13 இந்தியர்கள் மற்றும் 87 நாடுகளை சேர்ந்த, 300 பேர் அமெரிக்காவில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.
இதில், 100க்கு 74 மதிப்பெண் பெற்று, ஆசிரியர் திலிப், 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்வியாளராக தேர்வானார்.ஆசிரியர் திலிப்பின் தகவல் தொழில்நுட்பத்தையும், பயிற்று முறையையும் 'மைக்ரோசாப்ட்' நிறுவன சி.இ.ஓ., சத்தியா நாதல்லா பாராட்டினார்.கருத்தரங்கில் பங்கேற்ற பல்வேறு நாட்டு ஆசிரியர் குழுக்களை, வேறு நாட்டு பள்ளிகளுடன் இணைத்து, உலக அளவிலான கல்வியை கற்பிப்பதற்கு ஏற்பாடு செய்து, மைக்ரோசாப்ட் நிறுவன கல்விக்கான துணைத் தலைவர் ஆண்டனி சல்சிடோ அறிவித்தார்.
இதன்படி, சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், தைவான் ஆகிய நாடுகளில் உள்ள பள்ளி மாணவர்களுடன் இணைந்து கற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதுடன், நாடுகளுக்கிடையிலான கலாசார பகிர்வு ஏற்படுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.