Breaking News

1 முதல் பிளஸ் 2 வரை பாடத்திட்டம் மாற்றம்! மனப்பாட கல்வி முறைக்கு 'குட்பை'


சென்னை: மனப்பாட கல்வி முறையை கைவிடும் வகையில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. அறிவியல் பாடத்தில், கணினி அறிவியலும் இடம் பெறுகிறது.பள்ளி பாடத்திட்ட மாற்றத்திற்கான
அரசாணையை, பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், நேற்று வெளியிட்டு உள்ளார்.
அதன் விபரம்: சர்வதேச அளவிலான அறிவியல், சமூக, பொருளாதார வளர்ச்சி, போட்டி தேர்வுகளில், தமிழக மாணவர்களின் வெற்றியை கருத்தில் கொண்டு, பாடத்திட்டம் மாற்றப்படுகிறது.
சி.பி.எஸ்..,யை விட மேலானதாகவும், தமிழக பண்பாடு, கலாசாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாகவும், பாடத்திட்டத்தை உருவாக்க, மே, 11ல், வல்லுனர் குழு முடிவு எடுத்தது.
அதன்படி, 2018 - 19ம் கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகும்.
2019 - 20ல், இரண்டு, ஏழு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கும், 2020 - 21ல், மூன்று, நான்கு, ஐந்து மற்றும் 8ம் வகுப்புகளுக்கும், பாடத்திட்டம் மாற்றப்படும்.
ஆறு முதல், 10ம் வகுப்பு வரையான, அறிவியல் பாடத்தில், கணினி அறிவியல் அல்லது .டி., எனப்படும், தகவல் தொழில்நுட்பவியல் பற்றியபாடப்பகுதியும் இணைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பாடத்திட்டம் எப்படி மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து, அரசு சில நெறிமுறைகளை வகுத்துள்ளது.
அதன் விபரம்:* கற்றலை மனப்பாட நிலையில் இருந்து மாற்றி, படைப்பின் பாதையில் பயணிக்க வைக்க வேண்டும்
* தோல்வி பயம் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் தேர்வுகளை மாற்றி, கற்றலின் இனிமையை உறுதி செய்யும் வகையில், பாடம் அமைய வேண்டும்
* தமிழர்களின் தொன்மை, வரலாறு, பண்பாடு, கலை, இலக்கிய பெருமித உணர்வை, மாணவர்கள், அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் தெரிந்து கொள்ள, பாடத்திட்டம் உறுதி செய்ய வேண்டும்
* அறிவு தேடல் என்பது, வெறும் ஏட்டறிவு என, குறைத்து மதிப்பிடாமல், அறிவுஜன்னலாய் புத்தகங்கள் வழிகாட்ட வேண்டும் என்ற அடிப்படையில், பாடத்திட்டம் அமைய வேண்டும்.
இவ்வாறு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.
புத்தகம் படிக்க'மொபைல் ஆப்'
ஆசிரியர்களும், மாணவர்களும், எளிதில் பயன்படுத்தக் கூடிய வகையில், 'மொபைல் ஆப்' என்ற மொபைல் போன் செயலி உருவாக்கப்படும். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் செய்முறை மற்றும் பயிற்சி கையேடுகள் வழங்கப்படும்.
அண்ணா பல்கலை பாடத்திட்டம்!
தொழிற்கல்விக்கு, எட்டு ஆண்டுகளாக பாடத்திட்டம் மாறவில்லை. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, தொழிற்கல்வி பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட உள்ளன.

அண்ணா பல்கலை, வேளாண் பல்கலை மற்றும் தொழில்சார் பல்கலைகளுடன் இணைந்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தொழிற்கல்வி பாடத்திட்டத்தை, மாற்ற முடிவு செய்துள்ளது. பிளஸ் 1க்கு, 2018 - 19 மற்றும் பிளஸ் 2வுக்கு, 2019 - 20ம் ஆண்டில், இந்த மாற்றம் இருக்கும்.