Breaking News

'ஆல் பாஸ்' முறையில் திருத்தம் : விரைவில் வருகிறது மசோதா


புதுடில்லி: ''எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் தேர்ச்சி என்ற, 'ஆல் பாஸ்' முறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில், கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கும் முறை தற்போது உள்ளது. இந்த கொள்கையில் மாற்றம் செய்யும அதிகாரம், மாநிலங்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதற்காக, கல்வி உரிமை சட்டம், திருத்தம் செய்யப்பட உள்ளது.மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு, பின், மசோதா தாக்கல் செய்யப்படும். ஒரு மாணவனுக்கு, ஓராண்டு காலம் வீணாகக் கூடாது. அதனால், ஆண்டு தேர்வில் தோல்வி அடையும் மாணவனுக்கு இடைப்பட்ட காலத்தில் மறுவாய்ப்பு அளித்து, கல்வியைத் தொடர வாய்ப்பு அளிக்க வேண்டும். சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியத்தின் கீழ் படிக்கும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மீண்டும் பொதுத் தேர்வு கொண்டு வருவது குறித்து, இம்மாத இறுதியில் நடக்கும் சி.பி.எஸ்.இ., கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அடுத்த கல்வியாண்டு முதல், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.