Breaking News

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல்


தமிழகத்தில், சென்னை உட்பட நான்கு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர தாலுகாக்களிலும், புதுச்சேரியிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், 'அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது' என, கல்லுாரி கல்வி இயக்குனர் ராஜேந்திர ரத்னு தெரிவித்தார்.

அண்ணா பல்கலை கல்லுாரிகள், நிர்வாக அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக, அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன் தெரிவித்துள்ளார். 

சென்னை பல்கலை, தொலைநிலை கல்வியில், இன்று நடக்க இருந்த தேர்வு, ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

அரசு உத்தரவு
'சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் விழுப்புரம் கடலோர பகுதிகளிலும், புயல் முன்னெச்சரிக்கையாக, தனியார் நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, தமிழக தொழிலாளர் நலத்துறை செயலர், அமுதா அறிவுறுத்தியுள்ளார்.