Breaking News

1-வது, 2-வது வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சுற்றறிக்கை.

சி.பி.எஸ்.இ. 1-வது மற்றும் 2-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்றும், புத்தகப்பை கொண்டுவரக்கூடாது என்றும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்இ. கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


அதில் கூறியிருப்பதாவது:-
சுமையினால் வளர்ச்சி பாதிக்கும்சி.பி.எஸ்.இ. படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பை அதிக சுமையாக உள்ளது. இதனால் முதுகு வலி, தசை வலி, தோள்பட்டை வலி ஆகியவை அந்த மாணவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் அந்த மாணவர்களின் வளர்ச்சி பாதிக்கிறது. ஆரோக்கியம் கெட்டுப்போகிறது.மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் விஷயத்தில் பள்ளிகள் முக்கிய பங்குவகிக்கின்றன.மாணவர்கள் தினசரி வகுப்புக்கு தேவையான பாடப்புத்தகங்களை மட்டும் கொண்டுவருகிறார்களா? என்றுஆசிரியர்கள் திடீர் என்று மாணவர்களின் பைகளை சோதனை செய்யவேண்டும். தேவை இல்லாத வீட்டுப்பாட நோட்டுகள், தேவை இல்லாத பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்களை மாணவர்கள் கொண்டுவரலாம். அவ்வாறு மாணவர்களிடம் கொண்டுவரக்கூடாது என்று ஆசிரியர்கள்கூறவேண்டும்.

எடை குறைவான பைகள்

அதிக எடை இன்றி புத்தகப்பைகள் கொண்டு வருகிறார்களா? என்று தினமும் ஆசிரியர்கள் பரிசோதனை செய்யவேண்டும்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எடை குறைவான புத்தகப்பைகளை வாங்கிக்கொடுக்கவேண்டும். பள்ளிக்கூட மாணவர்களின் புத்தகங்களின் எடையை குறைக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் உறு துணையாக இருக்கவேண்டும்.பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தினமும் எந்த எந்த புத்தகங்கள், நோட்டுகள் கொண்டு வரவேண்டும் என்ற கால அட்டவணையை முன்கூட்டியே மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும்.மாணவர்களுக்கு பள்ளிக்கூட நேரங்களில் மட்டும் புராஜெக்ட் கொடுக்கவேண்டும். அதை குழுவாக மாணவர்கள் செய்யவேண்டும். அந்த புராஜெக்டை பள்ளிக்கூட நேரம் தவிர வீட்டுக்கு கொண்டுசெல்லக்கூடாது.

பெற்றோருக்கு வேண்டுகோள்

மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு படிப்பு தொடர்பாக கொண்டு வரும் எந்த ஒரு பொருளும் எடை குறைவாக இருக்கவேண்டும்.தொடக்கப்பள்ளி வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர், புத்தகப்பையை தினமும் கண்காணிக்கவேண்டும். தங்கள் குழந்தைகள் கால அட்டவணை படி கொண்டுசெல்கிறார்களா? என்பதை உறுதி செய்யவேண்டும்.

புத்தகப்பை, வீட்டுப்பாடம்

குறிப்பாக 1-வது மற்றும் 2-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் கட்டாயம் கொடுக்கக்கூடாது. அவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது.மாணவர்கள் அதிக எடையுடன் குடிநீர் பாட்டில் கொண்டுவருகிறார்கள். இதை தவிர்க்கவேண்டும். எனவே பள்ளிகள் குடிநீரை வைத்திருக்கவேண்டும். அந்த தண்ணீரை பள்ளிக்கூட முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் குடிக்கவேண்டும். மாணவர்கள் கூடுதலாக விளையாட்டு காலணிகளை கொண்டு வரக்கூடாது.இவ்வாறு சி.பி.எஸ்.இ. வாரியம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.