Breaking News

ஏழை குழந்தையிடம் கருணை காட்டுங்கள் : பள்ளி நிர்வாகத்துக்கு நீதிபதி வேண்டுகோள்


கல்வி கட்டண விஷயத்தில், விதவைத் தாயிடம், கறாராக நடந்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்த, மும்பை ஐகோர்ட் நீதிபதி, ஏழை குழந்தைகளிடம் கருணை காட்டும்படியும் வேண்டுகோள் விடுத்தார். 


மும்பையில் உள்ள குடிசைப் பகுதியில் வசித்து வருபவர் ரீட்டா கனோஜியா. கணவரை இழந்த இவர், தன், 4 வயது மகனை, அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில், எல்.கே.ஜி.,யில் சேர்க்க முயன்றார்; பள்ளி நிர்வாகம், 30 ஆயிரம் ரூபாய் கேட்டது. இதை அடுத்து, மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த ரீட்டா கனோஜியா, 'வீட்டு வேலை செய்து, வாழ்க்கை நடத்தி வரும் எனக்கு, பள்ளிக்கட்டணத்தை குறைத்து உதவ வேண்டும்' என, கோரிஇருந்தார். இதை விசாரித்த ஐகோர்ட் அமர்வு, கட்டட நிதி இல்லாமல், கல்வி கட்டணத்தை மட்டும் பெற்றுக்கொள்ளும்படி, பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியது.


அதை தொடர்ந்து, கல்வி கட்டணமான, 10 ஆயிரத்து, 500 ரூபாயை ஒரே தவணையில் செலுத்தும்படி, ரீட்டாவை, பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியது. இதனால், ஐகோர்ட்டை மீண்டும் அணுகிய ரீட்டா, படிப்படியாக கல்வி கட்டணத்தை செலுத்த வாய்ப்பு தரும்படி கோரினார்.



பள்ளி நிர்வாகத்தின் பிடிவாத போக்கால் எரிச்சலடைந்த, ஐகோர்ட் மூத்த நீதிபதி, வி.எம்.கானடே, ''தயவுசெய்து, ஏழை குழந்தைகள் கல்வி விஷயத்தில் கருணை காட்டுங்கள். மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், அந்த கட்டணத்தை நானே செலுத்துகிறேன்; ஒரு குழந்தையின் கல்வி பாழாக கூடாது,'' என்றார்.