Breaking News

கற்பித்தலில் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கும் கிடுக்கிப்பிடி


துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும், கற்பித்தலில் பல்வேறு கெடுபிடிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.


தமிழகத்தில், 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதால், எழுத படிக்க தெரியாத மாணவர்களும், 9ம் வகுப்புக்கு வந்துவிடுவதால், 10ம் வகுப்பில் தேர்ச்சி குறைகிறது. குறிப்பாக, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் குறைவாக உள்ளது என, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, கடந்த கல்வியாண்டு முடிவில், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம், வாசித்தல், எழுதுதல் அடிப்படையில், 1 முதல், 8ம் வகுப்பு வரை, இந்த தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள், அந்தந்த பள்ளிக்கு வழங்கப்பட்டிருந்தது. அதில், தமிழில், 50 சதவீதம், ஆங்கிலத்தில், 40 சதவீதம், கணிதத்தில், 60 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளி, ஆசிரியர்களுக்கு, ஒன்றியம் வாரியாக ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது. அதில், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், கற்றல் திறனை அதிகரிக்க, கெடு விதிக்கப்பட்டுள்ளது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் தொடங்கியுள்ள கெடுபிடி, அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்த கல்வியாண்டு முடிவில் நடந்த தேர்வு, ஆசிரியர் பயிற்றுனர்களால் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பள்ளியில் ஒவ்வொரு வித, வினாத்தாள்கள் இருந்தன. அதன் அடிப்படையில், தேர்ச்சி விகிதம் கணக்கிட்டு, ஆசிரியர்களுக்கு கெடு விதிக்கப்படுவதால், அதிருப்தி உருவாகியுள்ளது. பொதுத்தேர்வை போன்று, அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள்களை கொண்டு தேர்வு நடத்தி, அதில் கற்றல் திறனை மதிப்பிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.