Breaking News

தொழில்நுட்ப பிரச்னையால் 50 ஆயிரம் பேர் தவிப்பு!இன்ஜி., இடங்கள் நிரம்புமா? கல்லூரிகள் அச்சம்


அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கிற்காக, 1.84 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ள நிலையில், 1.33 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பங்கள் அளித்துள்ளதால், இன்ஜி., கல்லுாரிகளில் இடங்கள் நிரம்புமா என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்ப பிரச்னையால் தவிக்கும், 50 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களையும் ஏற்க கோரிக்கை எழுந்துள்ளது.


அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு சார்பில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள், ஆன்லைனில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆன்லைன் பதிவு துவங்கிய முதல் நாளிலேயே இணையதளம் முடங்கியது; பின், தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டன.
இந்நிலையில், மே, 31ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடிந்தது. பின், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியுடன் விண்ணப்பங்களை பெறும் கால அவகாசமும் முடிந்தது. கடைசி நேர தகவலின் படி, 1.33 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர்.
இதனால், அண்ணா பல்கலையும், தனியார் இன்ஜி., கல்லுாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன. கடந்த ஆண்டும் மிகக் குறைவாக, 1.54 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே
வந்தன.
இந்த ஆண்டு இன்ஜி., படிப்புக்கு மவுசு அதிகரித்துள்ள நிலையில், அதை விட குறைவாக விண்ணப்பங்கள் வந்துள்ளதற்கு, விண்ணப்பங்களை பெறும் முறையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, கல்லுாரிகள் சந்தேகம் அடைந்துள்ளன. இதனால், கல்லுாரி இடங்கள் நிரம்புமா என, அச்சம் அடைந்துள்ளனர்.


இதுகுறித்து கல்லுாரி நிர்வாகத்தினர் கூறியதாவது:இன்ஜி., படிக்க இன்னும் மவுசு குறையவில்லை. விண்ணப்பம் பெறுவதில் இந்த ஆண்டு துவக்கம் முதல், பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. குறைகளை கேட்கும் பிரிவில், தாமதமாகவே ஆட்கள் நியமிக்கப்பட்டனர். மாணவர் சேர்க்கை குழுவும் புதிதாக நியமிக்கப்பட்டதால், அவர்களால் பிரச்னைகளை சரி செய்ய முடியாமல் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையை போக்கி, இன்ஜி., கல்லுாரிகள், மாணவர்கள் இல்லாமல் மூடப்படுவதை தவிர்க்க, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

விண்ணப்ப கட்டணம் செலுத்தியவர்களுக்கும், விண்ணப்பம் அனுப்பியவர்களுக்கும் இடையில், 50 ஆயிரம் வித்தியாசம் உள்ளது. இதை தீவிர பிரச்னையாக எடுத்து, தொழில்நுட்ப கோளாறு, மாணவர்கள் மற்றும் பல்கலைக்கு இடையிலுள்ள இடைவெளியை நீக்கி, புதிய விண்ணப்பங்களை ஏற்க அவகாசம் வழங்க வேண்டும். தொழில்நுட்ப கோளாறால், ஆன்லைன்
விண்ணப்பங்களை பிரதி எடுத்து அனுப்ப பலருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இன்ஜி., படிக்க விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், கூடுதல் அவகாசம் தருவதுடன், கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களின் விண்ணப்பங்களையும் ஏற்க வேண்டும். கல்வியாளர் ரமேஷ் பிரபா

தொழில்நுட்ப வளர்ச்சி முன்னேறும் நிலையில், தற்போதைய மாணவர்கள் தொழில்நுட்ப படிப்பை படிக்கவே அதிகம் விரும்புகின்றனர். இன்ஜி., படிப்புக்கான மவுசு குறையவில்லை. கால அவகாசம் முடிந்தாலும் காத்திருப்போரின் விண்ணப்பங்களை பெற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எம்.அனந்தகிருஷ்ணன் முன்னாள் துணை வேந்தர், அண்ணா பல்கலைக்கழகம்