Breaking News

'இந்தாண்டு நுழைவு தேர்வு நடத்தும் சாத்தியம் இல்லை'


நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் சேர, பொதுநுழைவுத் தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு 
வெளியிட்டது.இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 2013ல், பொதுநுழைவுத் தேர்வு நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.


இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி இந்திய மருத்துவக் கவுன்சில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பொதுநுழைவுத் தேர்வு நடத்துவதற்கான உத்தரவை ரத்து செய்த தீர்ப்பை, நேற்று முன்தினம் திரும்பப் பெற்றது.இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் நேற்று கூறுகையில், 'மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான, பொதுநுழைவுத் தேர்வை இந்தாண்டு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை' என, தெரிவித்தன.