Breaking News

நாஸ்' தேர்விற்கு புதிய கட்டுப்பாடுகள் : திணறும் மாநில அரசு


தமிழகத்தில் 'நாஸ்' எனப்படும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அடைவு ஆய்வு (நேஷனல் அச்சிவ்மென்ட் சர்வே) தேர்வு நடத்த, இந்தாண்டு பல புதிய
கட்டுப்பாடுகளை மத்திய
மனிதவள மேம்பாட்டு துறை விதித்துள்ளது.
இதனால் புகார் இல்லாமல் நடத்தி முடிக்க, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கல்வித்துறை கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துஉள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் மாணவர்கள் கற்றல் திறனை ஆய்வு செய்யும் வகையில் 'நாஸ்' தேர்வு நடக்கிறது. இதற்கு முன் 2013ல் தேர்வு நடந்தது. அதன் பின் இந்தாண்டில் நவ.,13ல் நடக்கிறது. மாவட்டங்கள் தோறும் 61 பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு, 61 பள்ளிகளில் 5ம் வகுப்பு மற்றும் 51 பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவர் என 'ரேண்டம்' முறையில் ஒவ்வொரு பள்ளியிலும் தலா 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் கற்றல் அடைவு திறன் ஆய்வு செய்யப்படும். தமிழகத்தில் 2013 தேர்வில், மூன்று மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர் அடைவு திறனை விட எட்டாம் வகுப்பு மாணவர் திறன் மிக குறைவாக இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இது மாநில அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
இத்தேர்வை அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்.எஸ்..,) ஆசிரியர் பயிற்றுனர்களே மேற்பார்வை செய்தனர். அப்போது மாணவர்கள் விடை எழுத, அவர்கள் உதவியதாக சர்ச்சையும் ஏற்பட்டது.
புதிய கட்டுப்பாடுகள்: இதனால் இந்தாண்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி தேர்வு நடத்த ஆசிரியர் பயிற்றுனருக்கு பதில் பி.எட்., இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவியர் தேர்வு நடத்த உள்ளனர்.தேர்வை கண்காணிக்க எஸ்.எஸ்.., மேற்பார்வையாளர்களுக்கு பதில் ஒன்றியம் வாரியாக வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி..,), துணை கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வு நாளன்று அதே பள்ளி தலைமையாசிரியர் அங்கு இருக்க கூடாது. அப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்கள், தேர்வு நடத்துவோரிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். கலெக்டர் நியமித்த வருவாய்த்துறை குழு, சிறப்பு கண்காணிப்பில் ஈடுபடும் என பல புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் இந்த புதிய மாற்றத்தால் மாநில கல்வி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், " புதிய நடைமுறைகள் தேர்வு மையம் அமைந்துஉள்ள பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது," என்றார்.

அச்சத்தில் ஆசிரியர்கள் : மாணவர் அடைவு ஆய்வு மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனும் தெரியவரும். எஸ்.எஸ்.., மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மையம் (எஸ்.சி..ஆர்.டி.,) மூலம் ஆசிரியர்களுக்கு ஏராளமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதற்காக மாணவரின் அடைவு திறனை பாடங்கள் வாரியாக மனிதவள மேம்பாட்டுத்துறை மதிப்பீடு செய்யும். இதன் மூலம் சம்மந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனும் தெரியவரும் என்பதால் அச்சத்தில் உள்ளனர்.