Breaking News

"ஆசிரியர்களுக்குரிய மரியாதையே கெட்டுப் போச்சு'-குமுறும் ஆசிரியர்கள்


சமூகத்தில் ஆசிரியர்களுக்கான மரியாதை கெட்டுப் போய் விட்டதாக புதுக்கோட்டை ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை நகரில் உள்ள ராணியார் அரசுப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கழக நிறுவனத் தலைவர் மாயவன்உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்துக் கொண்டனர்.

நிகழ்வில் பேசிய மாயவன்,"இன்று ஆசிரியர்களுக்கான சமூக மரியாதை என்பது வெகுவாகக் குறைந்து வருகிறது.இந்த நிலை ஏன் எதனால் ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து நாம் அதனைக் களைய முற்பட வேண்டும். மேலும், தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளிகளில் இன்னும் தலைமை ஆசிரியர் இடம் நிரப்பப்படாமல் உள்ளது. அனேக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல, நம்மைப் போன்ற ஆசிரியர்களுக்கும் இல்லாத நிலைமைதான் இப்போது வரை இருக்கிறது. அதுமட்டுமின்றி, பள்ளிக் கட்டிடங்களின் நிலைமையும் மிக மோசமாக இருக்கிறது.இதையெல்லாம் சரிசெய்து தரும்படி, இந்த அரசாங்கத்தை நாம் ஒருமித்த குரலில் வலியுறுத்துவோம்"என்றார். 

இந்த பொதுக்குழு கூட்டத்தில், உயர்நிலை பள்ளி மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்துக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 'பட்டதாரி ஆசிரியர் கழகம்'ஒவ்வொரு வருடமும் தங்களது மாநில பொதுக்குழு கூட்டத்தை ஒவ்வொரு மாவட்டத் தலைநகரில் நடத்துவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடம் புதுக்கோட்டையில் நடத்தி இருக்கிறார்கள்.