Breaking News

புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்க அனைத்து பள்ளிகளிலும் இலவச நூலகம்: தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தைஊக்குவிக்கவும், அறிவாற்றலை பெருக்கவும் அனைத்து அரசு பள்ளிகளிலும் நூலகம் அமைக்கப்பட உள்ளது.
பொது நூலகத்துறை சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இத்திட்டம் வேலூர், விழுப்புரம், கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது.ஆனால் பல மாவட்டங்களில் மைய நுலக அதிகாரிகள் இத்திட்டத்தை கைவிட்டு விட்டனர். இந்நிலையில் தற்போது இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் பள்ளியிலேயே தங்களுக்கு தேவையான புத்தகங்களை கட்டணம் ஏதும் இன்றி இலவசமாக படிக்க முடியும். இத்திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் செயல்படுத்தப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான புத்தகங்களை சம்பந்தப்பட்ட பள்ளியின் நூலக பொறுப்பாளர்கள் அந்தந்த மாவட்ட மைய நூலகங்களுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.அதேபோல் அருகில் உள்ள கிளை நூலகங்கள் மூலமாகவும் பெறலாம். இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தால் அரசு பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.