Breaking News

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 578 ஆசிரியர்பயிற்றுநர் பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாவட்டங்களுக்கு
இடையே உபரி மற்றும் தேவை அடிப்படையில் பணி நிரவல் செய்யப்பட்டது.
 மேலும் பணி ஓய்வு, ராஜினாமா, இறப்பு, பணி உயர்வு மற்றும் வேறு அரசு பணிக்கு செல்லுதல் போன்றவற்றால் தமிழகம் முழுவதும் 228 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் காலியிடங்கள் ஏற்பட்டன. மேலும் நடப்பு கல்வியாண்டில் 350 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் 578 ஆசிரியர் பயிற்றுநர் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தநிலையில் இந்த 578 ஆசிரியர் பயிற்றுநர் காலி பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது 3 ஆண்டுகள் ஆசிரியர் பயிற்றுனராக மாறுதலில் பணியாற்ற ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அந்த வகையில் 1.10.2016க்கு பின்னர் தேர்வு செய்யப்பட்ட தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களிடம் இருந்து விருப்ப விண்ணப்பம் பெற்று வரும் 31ம் தேதிக்குள் பட்டியலிட்டு அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க மாநில திட்ட இயக்குநர் பள்ளி கல்வி இயக்குநரை கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வகையில் ஆசிரியர் பயிற்றுனராக பணியாற்ற விருப்பம் உள்ள ஆசிரியர்களின் பெயர் விபரங்களை பட்டியலிட்டு அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார்