Breaking News

சென்னை உட்பட 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை


சென்னை: சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப்பருவமழை தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதேபோல் தமிழக கடலோர மாவட்டங்களிலும் மழை கொட்டி வருகிறது.
நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி
இந்நிலையில் சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கை அருகே அதே இடத்தில் நீடிப்பதாக அவர் கூறினார்.
  
மிக கனமழை பெய்யும்
இதன்காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று அவர் கூறினார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம். தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு மிகக் கனமழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
 
புதுச்சேரியிலும் கனமழை
தமிழகத்தின் உள்மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியிலும் கனமழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  
அதிகளவாக 9 சென்டி மீட்டர்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் ஆனைக்காரசத்திரத்தில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல் சீர்காழி 7 சென்டி மீட்டரும், மீனம்பாக்கம், காரைக்கால் தலா 5 சென்டி மீட்டரும் திருத்தணி, செங்கல்பட்டு தலா 2 சென்டி மீட்டரும் செங்குன்றம், தாம்பரம், சாத்தான்குளத்தில் 2 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.