Breaking News

கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியாகச் செலுத்த வேண்டும்: மத்திய அரசின் அடுத்த அதிரடி!

'பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் இனி கல்விக்
கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியாகவே பெறவேண்டும்' என்று மத்திய அரசின் மனிதவளத்துறை, கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது.
கல்விக் கட்டணங்கள் பிரகாஷ் ஜவடேகர்
மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 'பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அனைத்துக் கட்டணங்களையும் இணையத்தின் வழியாகப் பெறுவதற்குத் தேவையான ஆலோசனைகளை, அனைத்து பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிறுவனங்களும் வழங்க வேண்டும்' என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
'கல்வி நிறுவனங்கள், மாணவர்களுக்கான கல்விகட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்ற இதர கட்டணங்களையும் ஆன்லைன் வழியாகவே பெற வேண்டும். சம்பளம் மற்றும் இதர செலவினங்களையும் டிஜிட்டல் வழியில் மேற்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் உள்ள கேன்டீன்களிலும் மற்றும் இதர கடைகளிலும் ஆன்லைன் வழியே பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இதற்காக பீம்ஸ் செயலியையும், இந்தச் செயலியுடன் மாணவர் வங்கி கணக்கையும் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். கல்வி வளாகத்தில் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திட வேண்டும். இதற்காக, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் ஒரு சிறப்பு அலுவலரை நியமித்து, என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்ற விவரத்தை ஒவ்வொரு மாதமும் அனுப்பிவைக்க வேண்டும்' என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதில் முன்னோடியாக, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் வழியாகச் செலுத்த அறிவுறுத்தியிருப்பது நல்ல விஷயமே. அரசின் வழிகாட்டுதல் இல்லாமலேயே, ஏற்கெனவே பல உயர்கல்வி நிறுவனங்களில் கட்டணங்கள் வங்கிகளின் வழியாகப் பெறப்படுகின்றன. இப்போது, அரசின் வழிகாட்டுதலை ஏற்படுத்தி இருப்பதன்மூலம், இனி வரும் காலங்களில் இதைத் தனியார் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் கொண்டுவருவதற்கான வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. அரசு கொண்டுவரும் மாற்றங்கள் வழியே மக்களுக்கு நல்லது நடந்தால் பாராட்டுவோம்.