Breaking News

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு ‘தட்கல்’ மூலம் விண்ணப்பிக்கலாம்


ஜூன், ஜூலை மாதங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 சிறப்பு துணை
பொதுத்தேர்வு எழுத அலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்துக்குரிய முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் 8.6.2017 (இன்று), 9.6.2017 (நாளை) ஆகிய 2 நாட்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மார்ச்–2017 எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதியவர்கள் தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலினையும், தேர்வு எழுதாதவர்கள் தமது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டையும் (ஹால் டிக்கெட்) விண்ணப்பத்தினை பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.

சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கான கட்டணத்தை விண்ணப்பம் பதிவு செய்யும் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு தட்கல் திட்டத்தில் அனுமதிக்கப்படும் தேர்வர்களுக்கு நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.