Breaking News

பஸ்சில் இடம் பிடிக்கும் தகராறில் பள்ளி மாணவன் கழுத்து அறுப்பு சக மாணவர்கள் வெறிச்செயல்

சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் தெற்கு தில்லை நகரைச் சேர்ந்தவர் கவியரசன் (14), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கெங்கவல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி பஸ்சில் செல்வது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல, அந்த பஸ்சில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இருக்கையில் இடம் பிடிப்பது தொடர்பாக, சக மாணவர்கள் சிலருடன் கவியரசனுக்கு தகராறு ஏற்பட்டது.

பள்ளிக்கு வந்ததும், அனைவரும் வகுப்புகளுக்கு சென்று விட்டனர். காலை இடைவேளையின் போது, கவியரசன் கழிவறைக்கு சென்றார். அப்போது பஸ்சில் தகராறு செய்த மாணவர்கள் அங்கு வந்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆத்திரமடைந்த அவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த பிளேடால், கவியரசனின் கழுத்தை சரமாரியாக கிழித்தனர். இதில், படுகாயங்களுடன் மயங்கி விழுந்த மாணவரை, பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு, கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சின் இருக்கையில் இடம் பிடிப்பது தொடர்பான தகராறில், மாணவன் கழுத்தை சக மாணவர்களே பிளேடால் அறுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.