Breaking News

போலிச் சான்றிதழ்: அண்ணாமலை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள் இருவர் உள்பட 6 பேர் பணிநீக்கம்


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியாற்றி வந்த இரு உதவிப்பேராசிரியர்கள், 4 பல்கலைக்கழக ஊழியர்கள் நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி, நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதன் விளைவாக தமிழக அரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழுக்கள் 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை அளித்தன.

இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனாவை கடந்த 2013 ஏப்ரல் 5-ம் தேதி நியமனம் செய்து, அவர் உடனடியாக பொறுப்பேற்றார்.

அவருக்கு உதவியாக மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பில் தஞ்சை குறுங்குளம் சர்க்கரை ஆலை முதன்மை நிர்வாக அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ் ஆகிய இருவரை தமிழக அரசு நியமனம் செய்தது. இதனையடுத்து நிதிநெருக்கடியைப் போக்க பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பல்கலைக்கழகத்தில் 12,500 ஆசிரியர், ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள் சான்றிதழ்களை நம்பகத்தன்மை சான்றிதழ் அங்கீகாரம் பெற அந்தந்த கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் பலர் போலிச் சான்றிதழ் கொடுத்து பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்களில் சேர்ந்து பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.

6 பேர் பணிநீக்கம்: பல்கலைக்கழக நிர்வாகம் முதல் கட்டமாக போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் சுப்பிரமணியன், ஆங்கிலத் துறையில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் ராஜ்மோகன் மற்றும் லக்னோ படிப்பு மையத்தில் பணியாற்றும் தொடர்பு அலுவலர் அருள், பொறியியல் புல நூலகத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பாண்டியன், பல்கலைக்கழக நிர்வாக கட்டட அலுவலகத்தில் பணியாற்றும் கருத்தியல் உதவியாளர் அப்பாதுரை, தொலைதூரக் கல்வி மையத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6 பேர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மேலும் பலர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், கூடுதலாக பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள், அரசின் பல்வேறு துறைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இது பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.