Breaking News

தனியார் பள்ளியில், மாணவர்கள் தேர்வு எழுத உதவிய ஆசிரியர்கள்: கூண்டோடு இடமாற்றம்


பரமக்குடி, மார்ச். 17–ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. தேர்வுஎழுதிய மாணவர்களுக்கு அங்கு கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர் விடைகளை கூறியுள்ளார்.

இதேபோன்று பிளஸ்–2 வேதியியல் தேர்விலும் சில மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியுள்ளனர். இதுகுறித்து சென்னையில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிந்தது.


அதன் பேரில் தேர்வுத்துறை இணை இயக்குநர் சசிரேகா, ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் அந்த தனியார் பள்ளியில் தேர்வு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி ஜெயக்கண்ணு கூறியதாவது:–

பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு தேர்வு எழுத சில ஆசிரியர்கள் உதவி வருவதாக எனக்கு புகார் கடிதம் வந்தது. இதேபோன்று உயர் அதிகாரிகளுக்கும் புகார் கடிதம் சென்றுள்ளது.

அவர்களது உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியில் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக இட மாற்றம் செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.