Breaking News

விடை திருத்தத்தில் குளறுபடி : 3,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி செய்த, 3,000 ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு தேர்வுத்துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 
பிளஸ் 2மற்றும், 10ம் வகுப்புக்கு, அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில், 20 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இதில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்தே, அவர்களின் உயர்கல்வி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த முறை பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வுகளில், பல மாணவர்களுக்கு, மதிப்பெண்ணில் குளறுபடி ஏற்பட்டது. அவர்களது மதிப்பெண் பிழைகளை சரி செய்ய, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.
இதில், பிளஸ் 2வுக்கு, 5,000 பேரும், 10ம் வகுப்பில், 2,000 பேரும், பிழைகளை சரி செய்ய விண்ணப்பித்தனர். அவர்களின் விடைத்தாள்களில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு சென்னையில் நடந்தது. இதன் முடிவில், பிளஸ் 2வில், 2,070 பேருக்கும், 10ம் வகுப்பில், 821 பேருக்கும், பிழைகள் இருந்தது கண்டறியப்பட்டது. பின், அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, திருத்திய விடைத்தாள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், விடை திருத்தத்தில் குளறுபடி செய்த விடை திருத்தும் ஆசிரியர்கள், மேற்பார்வையிடுவோர், மதிப்பெண் கண்காணிப்பாளர் என, 3,000பேரின் பட்டியல் தயாராகி உள்ளது. இவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான பள்ளிக்கல்வி செயலக உத்தரவின் பேரில், ஆசிரியர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.